என்ன கொடுமை சார் இது.. குடிநீர் பைப்பை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் கட்டிய அவலம்… பொதுமக்கள் முறையிட்டும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
28 October 2022, 12:34 pm

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்டும்போது தண்ணீர் குழாயை அகற்றி, மாற்று இடத்தில் வைக்காமல் கால்வாய்க் கட்டிய அவலம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் இரண்டாவது வார்டில் உள்ள தெருக்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்லப்பெருமாள் நகரின் பிரதான சாலையில் பேரூராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாயை அகற்றி வைக்காமல் கழிவுநீர் கால்வாயை கட்டி உள்ளனர்.

இந்த கால்வாய் கட்டுவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம், வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் என அனைவரிடமும் முறையிட்டுள்ளனர். அப்பகுதி மக்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் தண்ணீர் குழாயை கழிவு நீர் கால்வாய் நடுவே வைத்து கட்டப்பட்டுள்ளதால், தண்ணீரில் கழிவு நீர் கலக்கும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.

அவ்வப்போது குழாயில் வருகின்ற தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், கருப்பு கலரில் வருவதாகவும், அதை பயன்படுத்தும் போது உடல்நிலை குறைவு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மெத்தன போக்கில் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

  • kuberaa movie first day first show audience reaction மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?