எனது நண்பர் கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது… மத்திய அரசுக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 4:33 pm
Quick Share

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் விருதுகளை வழங்கி கவிரவிக்க உள்ளார்.

இந்த நிலையில், கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த திரு. சசீந்திரன் முத்துவேல், அந்தமானைச் சேர்ந்த இயற்கை விவசாயியான திருமதி செல்லம்மாள் ஆகியோரையும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காகத் தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 227

0

0