‘ஏரியில் மணல் கொள்ளை ஜரூர்’.. போஸ்டர் ஒட்டிய விசிகவினரை புரட்டியெடுத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
19 December 2022, 10:56 am
Quick Share

விழுப்புரம் ; செஞ்சி அருகே ஏரியில் மணல் கொள்ளை நடப்பதாக போஸ்டர் ஒட்டிய விசிகவினர் மீது திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த முன்வர் பாஷா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்வர் பாஷா ஏரியில் மண் திருட்டில் ஈடுபடுவதாக செஞ்சி பகுதி முழுவதும் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியில் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும், மணல் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க இருப்பதாக போஸ்டர் ஒட்டியவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து, மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது, திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது, மணல் கொள்ளை குறித்து பேசுகிறோம் என அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த லியாகத் அலி மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கொடூரமாக தாக்கினர். அவர்கள் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதோடு காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர்.மேலும் விடாமல் தொடர்ந்து அவர்களை துரத்தி துரத்தி அடித்ததோடு முட்புதர்களுக்குள் தள்ளி மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் லியாகத் அலி மற்றும் அவரது உடன் வந்தவர்கள் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 338

0

0