முதலமைச்சர் ஸ்டாலின் போலவே காவல்துறையும் செயலிழந்து விட்டது : அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
31 March 2023, 2:24 pm
Quick Share

விழுப்புரம்: தமிழகத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் 24 மணி நேரமும் விற்பனை ஆகி வருகிறது விழுப்புரத்தில் அதிமுக எம்பி சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம், போதை ஆசாமிகளான சகோதரர்கள் ஜி ஆர் பி தெருவை சேர்ந்த ராஜசேகர் மற்றும் அவரது சகோதரர் வல்லரசு ஆகிய இருவரும் இப்ராஹீம் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
பின்னர் போலீஸார்கள் குற்றவாளியான ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்வியால் பெரும் அதிர்வலை எற்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், உயிரிழந்த இப்ராஹிம் உடல், விழுப்புரத்தில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் இல்லத்துக்கு நேரில் வந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்திந்து, ஆறுதல் தெரிவித்து அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனியாக வெளியே வர முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திமுக கட்சியை சேர்ந்த இருவர் முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்ட பனியனை அணிந்து விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் கடைகளில் புகுந்து கஞ்சா போதையில் பலரை குத்தி உள்ளனர்.

இதில் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவர் இவர்களால் கொலை செய்யப்பட்டார். ஆனால், சட்டமன்றத்தில் இது தொடர்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தடுக்க வந்த இப்ராஹிமை கொலை செய்ததாக தமிழக முதல்வர் அப்பட்டமாக பொய் சொல்லி வருகிறார். தொடர்ந்து, விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் பட்டப்பகலில், கஞ்சா போதையில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நடைபெற்றது. அதேபோல், தனிமையில் இருந்த இரண்டு மாணவர்கள் பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தும் செயலும் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது. இதனை தடுக்க இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கஞ்சா போதையில் குற்றம் செய்த நபர்களை குடும்பத்தகராறு என மாத்தி கூறுவது எந்த அளவுக்கு நியாயமற்றது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை நன்றாக செயல்பட்டாலும், முதல்வர் போலவே காவல் துறை செயலிழந்து போயுள்ளது என குற்றம் சாட்டினார். இறந்து போன இப்ராஹிம் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் திமுகவினர் மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என குற்றம் சாட்டினர்.

Views: - 394

0

0