நானோ, அமைச்சரோ அரசு நிலங்களை ஆக்கிரமித்திருந்தாலும் அகற்றுவோம்… அமைச்சர் துரைமுருகன் ‘கலகல’!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 8:52 pm
Quick Share

மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேனூரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பகுதி நேர கடையை திறந்து விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில், துணை மேயர் சுனில் குமார் ,கூட்டுறவு இணை இயக்குநர் குண ஐயப்பதுரை, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :- மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரியம் ஆணையத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இது தவறானது.

ஏற்கனவே பலமுறை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என ஆணையம் கூறியது. ஆனால், தற்போது தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது கண்டிக்கதக்கது. இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மேலும் இதில் மத்திய அரசின் ஆதரவில்லாமல் இவர்கள் பேசமாட்டார்கள். இதில், மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது இதுகுறித்து ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை.

eஇதுகுறித்து விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யபட வேண்டும் என்பது மாறுபட்ட கருத்தல்ல. அதனை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். தமிழக முழுவதும் அங்கன்வாடியில் செயல்பட்ட எல்கேஜி, யுகேஜி மூடியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத்துறை மூலம் கணக்கீடு செய்கிறோம். நீர்நிலைகள் குறித்து முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக அமையும். நானோ, அமைச்சரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ அரசு நிலங்களை ஆக்கிரமித்திருந்தாலும், அதனை அகற்றுவோம், என்று கூறினார்.

Views: - 622

0

0