அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா..? அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை மூடுவதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
7 June 2022, 8:13 pm
Quick Share

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன், ஆங்கில வழிக்கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தும் நோக்கிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் கடந்த அதிமுக ஆட்சியின் போது துவங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்றும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவார்கள், எனக் கூறினார்.

தமிழக அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ரத்து செய்வது திமுக அரசுக்கு தொடர் கதையாகி விட்டதாக அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது! எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு! மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்த போதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும். மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 520

0

0