CAA சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் காலூன்ற விடமாட்டோம்… பாஜக அரசின் நாசக்கார செயல் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 2:33 pm
cmm
Quick Share

CAA சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் காலூன்ற விடமாட்டோம்… பாஜக அரசின் நாசக்கார செயல் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

நாட்டில் பல எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய குடியுரிமை திருத்த சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒரு வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ, சட்டமானதற்கு முழு காரணமே அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான்.

அப்போது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக தான். இதுபோன்று, 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏவைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ சட்டம் கால்வைக்க விடமாட்டோம் என கூறியுள்ளார்.

Views: - 159

0

0