என் பின்னாடியே ஏன் வரீங்க? என் கிட்ட இந்த வேலையெல்லாம் வேணா : செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 10:38 am
cb
Quick Share

என் பின்னாடியே ஏன் வரீங்க? என் கிட்ட இந்த வேலையெல்லாம் வேணா : செய்தியாளரை மிரட்டிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்தவகையில் பல்லடம் பகுதியில் அண்ணாமலை நேற்று காலை தனது பிரச்சார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, தனியார் செய்தி தொலைக்காட்சி வாகனம், அண்ணாமலையின் பிரச்சார வேனுக்கு முன்பாக சென்றபடி, அண்ணாமலை பிரச்சார பயணத்தை ஒளிப்பதிவு செய்து வந்தது.

அண்ணாமலை பிரச்சாரத்தை கவர் செய்வதற்காக செய்தி வாகனம் தனது வாகனத்திற்கு முன்பாகவே சென்று கொண்டிருந்ததால், டக்கென ஓவர்டேக் செய்து செய்தி தொலைக்காட்சி வாகனத்தை வழிமறித்தார் அண்ணாமலை.

வேனில் இருந்து கீழே இறங்கி செய்தியாளர்களை நோக்கி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை. என் தேர்தல் பிரச்சாரத்தை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? நான் மக்களை பார்க்க வந்திருக்கேன். மீடியாவை பார்க்க வரல. என்ன இடைஞ்சல் பண்ணிட்டு இருக்கீங்களா? என் பிரச்சாரத்தின்போது உடன் வந்தால் ஒரு காருக்கு 8 ஆயிரம் ரூபாய் சேர்ப்பாங்க தேர்தல் ஆணையம். நீங்க ஏன் என் பிரச்சாரத்துக்கு உள்ள வர்றீங்க?” என ஆவேசமாகப் பேசினார்.

அதோடு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் மேலதிகாரிகளுக்கும் போன் செய்த அண்ணாமலை, “நான் பல்லடத்தில் இருக்கேன். உங்க நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர்ஸ் இங்கே ரொம்ப அட்டூழியம் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப ஓவரா போறாங்க. பிரச்சாரத்துக்கு பெரிய தொந்தரவா இருக்காங்க. போக்குவரத்து நெரிசலை உண்டாக்குறாங்க..

நான் அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் செய்ற மாதிரி ஆகிடும்” என மிரட்டும் தொனியில் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசிய அண்ணாமலை, “என்கிட்ட இந்த வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. 3 முறை வார்னிங் கொடுத்தேன்ல. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கணும்.

இந்த பழக்கம் எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க. மக்கள் ஓட்டு போடுறாங்க.. நான் மக்களை பாக்குறேன். நீங்க உங்க டிவியில் போட்டு தான் அவங்க ஓட்டு போடணும்னு இல்ல. உங்களை யாரு வரச் சொன்னது? எல்லாம் ஒரு லிமிட் தான்” என ஆவேசமாகப் பேசினார்.

இதனால் செய்தியாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கோவை வந்ததுமே, “மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்த கண்காணிங்க. ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டேன்” என்று கூறிய அண்ணாமலை, தற்போது செய்தி சேகரிக்கச் சென்றவர்களை, “ஏன் என் பிரச்சாரத்தை டிஸ்டர்ப் பண்றீங்க. என் கூட எதுக்கு வர்றீங்க. நீங்க கவர் பண்ணி எனக்கு ஓட்டு போடப் போறாங்களா” என கடிந்து கொண்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Views: - 83

0

0