‘நாய விட மோசமா நடத்துறாங்க… மானமே போகுது.. இலவசப் பேருந்து பயணம் எங்களுக்கு வேண்டாம்’ : அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு கொந்தளித்த பெண்கள்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
7 June 2022, 1:37 pm
Quick Share

இலவசப் பயணம் மேற்கொள்வதால் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மகளிரை தரைக்குறைவாக பேசி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூரில் இருந்து ஆலமரத்து பட்டி சென்ற அரசு நகரப்பேருந்து, கோடங்கிபட்டி வந்த போது அங்கு ஒரு தாய், மகள் இருவரும் ரேஷன் கடை பொருட்கள் வாங்கி, அந்த பொருட்களை நகரப்பேருந்தில் எடுத்துச் செல்ல முயன்றனர். முதலில் சிறுமி பேருந்தில் ஏறிய நிலையில், அவரது தாய் ரேஷன் பொருட்களை ஏற்றிய பிறகு, பேருந்தில் ஏறுவதற்காக காத்திருந்தார்.

அப்போது, திடீரென்று அரசுப் பேருந்தினை ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால், பதறிப் போன தாய், ‘என் பிள்ளை, என் பிள்ளை,’ என்று கதறியுள்ளார். பின்னர் அந்த பேருந்தினை துரத்தி பிடித்த மக்கள் பேருந்தினை சிறைபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், மகளீருக்கு இலவச பேருந்து என்று சொன்னதிலிருந்து மகளிரை மதிப்பதில்லை என்றும், நாயை விட கேவலமாக நடத்துவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இவ்வழியாக செல்லும் அரசு பேருந்து நடத்துநர்கள் ஆபாசமாக பேசி வருவதாகவும், மகளிர் மானமுடன் வாழ நாங்கள் பணம் கொடுத்தே பயணிக்கின்றோம் என்றும், ஆகவே இலவசம் என்ற ஒற்றை வார்த்தையினால் மகளிரின் மானமே போவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Senthil Balaji - updatenews360

கரூரில் தற்போது தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்தாலும், இங்குள்ள கோடங்கிப்பட்டி கோயிலில் தான் முதன் முதலில் சாமி கும்பிட்டு தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்குவார். எம்.எல்.ஏ, எம்.பி, ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகரமைப்பு தேர்தல்களில் இன்றும் காலம் காலமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவர் சுவாமி தரிசனம் செய்யும் பகுதியிலேயே பெண்களுக்கு இதுபோன்று பிரச்சனை ஏற்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாகி உள்ளது.

Views: - 780

0

0