நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது… நாளையும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனுமதி

Author: Babu Lakshmanan
28 January 2022, 10:50 am

சென்னை : தமிழகத்தில் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால், 2022ன் தொடக்கத்தில் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிப்.,19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

28ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.,04ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை பிப்.,05 ஆகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்.,07ம் தேதி இறுதி நாளாகும். வாக்குப்பதிவு பிப்.,19ம் தேதி நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.,22ம் தேதி எண்ணப்படும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார்கள். மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. வேட்புமனுதாக்கல் செய்ய 8 நாட்கள் மட்டுமே உள்ளதால், சனிக்கிழமையான நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?