பாதாள சாக்கடை திட்டப்பணியின் போது மண்சரிவு : 2 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
17 July 2022, 1:44 pm

விருதுநகர் : சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 30 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 6பேர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தீடீரென்று குழி தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அப்போது, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (40) கிருஷ்ண மூர்த்தி (50) இருவரும் மீதும் மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் மற்றும் சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இருந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்