முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க அரசு விழா பூஜையை தடுத்து நாடகம் : திமுக எம்பி மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகனும் : இந்து முன்னேற்றக் கழகம்

Author: Babu Lakshmanan
17 July 2022, 4:19 pm
Quick Share

இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியே வரவேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.

இந்து முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் சிவனடியார்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கோபிநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியிருப்பதாவது :- கடந்த சில மாதங்களாக திராவிட மாடல் என்ற போர்வையில் தமிழக அரசு மோசமாக செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்காகவும், ஆட்சி பிடிப்பதற்காக ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் விதமாக சிறுபான்மையினருக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு ஹிந்துக்களை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்துக்கள் ஓட்டு பெறாமல் யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை இதன் மூலம் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். இரண்டு நாளைக்கு முன்பு தர்மபுரியில் எம்பி செந்தில்குமார் Pwd நிகழ்ச்சிக்குச் சென்று காலங்காலமாக நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு பூமி பூஜை போட்டுத்தான் துவங்குவார்கள்.
அதன் அடிப்படையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் எந்த மதசார்பு இல்லாமல் இருந்த நிலையில் முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இந்துக்களை கேவலப்படுத்தி உள்ளார். எனவே எம்பி செந்தில்குமார் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து இந்து அமைப்புகளும் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டிஜிபி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று சொல்லி மறுநாளே தமிழகத்தில் எங்காவது இடத்தில் கொலை நடந்து விடுகிறது.

எனவே உளவுத்துறைகளை முடுக்கி விட்டு தமிழகத்தில் நடைபெற உள்ள பிரச்சனைகளை முன்னறிந்து தீர்வு காண வேண்டும். கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் குறித்து தீர விசாரித்து உரிய ஆய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்.

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இடங்களை மீட்டு எடுக்க என்று கூறி ஒரு மாயை சித்தரிக்கிறார். இஸ்லாமியர்கள் மசூதியும், கிறிஸ்தவர்களின் சர்ச்சை எப்படி கொள்கையின்படி நடக்கிறதோ இந்துக்கள் கோவில்களை இந்துக்களிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

ஜாதியை வைத்தும் மதங்களை வைத்தும் பிழைப்பு நடத்துபவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும். ஜாதி அரசியல் செய்யும் தலைவர்கள் எல்லாம் ஒரு பட்சமாய் செயல்பட்டால் எதிர்காலத்தில் இந்துக்கள் அனைவருமே தக்க பதிலடி கொடுப்பார்கள். திருமாவளவன் எந்த கூட்டத்தில் பேசினாலும் சம்பந்தமில்லாமல் சனாதனம், மதம் எனும் பேசுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் இதுவரை என்ன செய்திருக்கிறார் என்றால் அதற்கு பதில் இல்லை.

இந்து முன்னேற்ற கழகம் விடுகிற சவால் என்ன என்றால் யாரெல்லாம் சனாதனத்தை எதிர்க்கின்றனரோ ஒரு மேடை போட்டால் அவர்களிடம் விவாதிக்க தயார், என தெரிவித்தார்.

Views: - 473

0

0