ஆடி மாத பிறப்பு… ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும் பண்டிகை… கரூர் அமராவதி ஆற்றில் கோலாகலம்!!

Author: Babu Lakshmanan
17 July 2022, 7:47 pm
Quick Share

ஆடி மாத பிறப்பையொட்டி கரூர் அமராவதி ஆற்றில் விழாக் கோலம் பூண்டுள்ளது.

தட்சிணாயன புண்ணியகாலமான ஆடிமாதம் பிறந்துள்ளது. ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் சேலம் பட்டை கோயில், பால்மார்க்கெட் பகுதியில் கட்டு கட்டாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி18ஆம் நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல்நாளில் மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள படிக்கட்டுத்துறை, திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றில் ஒரு புறம் தண்ணீர் வரும் நிலையில், லேசான மழைத்துளிகளில், மாலை நேரத்தில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் கைகளில் தேங்காய்களை குச்சிகளை கொண்டு நெருப்பில் வாட்டி பின்பு, ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

Views: - 666

0

0