கல்லூரி வளாகத்தில் புகுந்த நாயை அடித்தே கொன்ற ஊழியர்கள் : வைரலான அதிர்ச்சி வீடியோ… பாய்ந்தது நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 9:52 pm

கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை சரவணம்பட்டி துடியலூர் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் தெரு நாய் ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த கல்லூரி ஊழியர்கள் விரட்டியுள்ளனர்.

அப்போது ஊழியர்களிடமிருந்து தப்ப முயன்ற நாய் இரும்பு கம்பிகள் இருந்த புதர் ஒன்றில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் நாயை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கயிறு மூலம் இருவர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்துள்ளனர். இந்த காட்சிகளை பதிவு செய்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அந்த காட்சிகளில் ஊழியர்கள் புதருக்குள் சிக்கிய தெரு நாய் கட்டையால் தாக்குவதும், வலியால் நாய் கத்துவதும் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா என்பவர், நாய் வீடியோ காட்சிகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை? தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?