அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது திமுக அரசு : முதியோர் இல்லத்தை திறந்த இபிஎஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 12:53 pm
EPS - Updatenews360
Quick Share

சேலம் மாவட்டம் ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:- ஆதரவற்ற முதியோர் இல்லத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் அம்மா ஆட்சி காலத்திலும் சரி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அ.தி.மு.க.தான் ஏழைகளுக்கு உதவுகின்ற கட்சி.

ஏழை மக்களுக்கு திட்டங்களை வகுப்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை. அம்மா இருந்தபோது, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயதானவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கி, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.

இதையடுத்து அம்மா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதியோர் உதவித்தொகை பெற கிடைக்கப்பெற வழியற்றதை கேள்விப்பட்டு நான், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வழங்கினேன்.

அதன் வாயிலாக கிட்டத்தட்ட 4 லட்சம் முதியோர்களுக்கு அம்மா அரசு அறிவித்த முதியோர் உதவித்தொகை கிடைக்கப்பெற்றது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை நிறுத்திவிட்டது.

முதியோர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்கள் உணவு உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு, அந்த திட்டத்தை அமல்படுத்தி முதியோர் உதவித்தொகை வழங்கியது. முதியோர்களை மறந்து விடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 315

0

0