திமுக சொன்னால்தான் அறிக்கையே விடறாங்க… அப்ப யாரு இங்க அடிமை? எஸ்பி வேலுமணி பரபரப்பு பேச்சு!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2023, 4:07 pm

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

.முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி,சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார்,அம்மன் அர்ச்சுணன், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், ஜெயராமன், கந்தசாமி, அமுல் கந்தசாமி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து தமிழக அரசுக்கு எதிராகவும் விலைவாசி உயர்வை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
எஸ்.பி.வேலுமணி,தமிழகத்தில் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை அறிக்கை மூலமும் ஊடகங்கள் மூலமும் எடப்பாடியார் சுட்டிக் காட்டியுள்ளார் எனவும் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்தால் உடனடியாக நிதி உதவி செய்து, கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு துறை மூலமாக விலை அதிகமாக இருக்கக்கூடிய காய்கறிகளை வாங்கி குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சி காலத்தில் இது போன்ற சூழலில் அப்படி செய்யப்பட்ட நிலைநிலையில் திமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இது குறித்து தெரிவித்தும், திமுக அரசு செவி சாய்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

காய்கறி,மளிகை, கட்டுமானம் என அனைத்து விதமான பொருட்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது எனவும் அரசு தலையிட்டு விலையினை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கோவை மாவட்டத்திற்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் கொடுக்காமலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் முழுமையாக நிறைவு செய்யாமல் இருப்பதாகவும் கூறியதுடன், அதிமுக ஆட்சியில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக முதல்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டு வழிகளில் மட்டும் விடப்படும் என கூறுவதாகவும் அனைத்து வழிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும் கோவை டிஐஜி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்திரவிட வேண்டும் என்றும் யாராவது இந்த சம்பவம் குறித்து உண்மை தன்மையை பேசினால் கைது செய்யக்கூடிய நிலை இருப்பதாகவும் அதிமுக ஐடி விங் பொதுவான கருத்துக்களை சொன்னால் கூட வழக்கு போடப்படுவதாகவும் தெரிவித்தார்.

எப்பொழுது சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என கூறிய அவர்,மத்திய அரசு எப்போது விலைவாசியை உயர்த்தினாலும் அப்போதெல்லாம் எடப்படியார் அதனை சுட்டி காட்டி அறிக்கை கொடுத்து இருக்கின்றார் எனவும் அதிமுக ஆட்சியில் வெங்காய விலை ஏறிய பொழுது, அதற்கு எடப்பாடியார்தான் காரணம் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

இப்போதைய தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் நாங்கள் மதிக்கக்கூடியவர் என்றாலும் காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், காலையில் வேலைக்கு செல்பவர்கள் குடித்து விட்டு போக முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியதுடன் அவருக்கு அந்த துறையை கொடுத்து இப்படி பேச வைத்திருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

நாங்கள்தான் உண்மையான எதிர்கட்சி என பா.ஜ.க தலைவர்கள் பேசி வருவது குறித்த செய்தியாளர்களின் கேல்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த ஆட்சியில் மக்களுக்காக அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கட்சி அதிமுக எனவும் சட்டமன்றத்தில் எடப்பாடியார் கேள்விகளுக்கு திமுகவால் பதில் சொல்ல முடியவில்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில் சில கட்சிகள் வளர்வதற்காக தலைவராக இருப்பவர்கள் நாங்கள் தான் எதிர்கட்சி என்று சொல்வார்கள் என்றும் திமுக உடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே அதிமுக வுடன் கூட்டனியில் இருந்தபோது பல போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தியவர்கள்.

ஆனால் தற்போது திமுக சொன்னால்தான் அறிக்கையே கொடுக்கிறார்கள் என்பதால் இப்போது யார் அடிமை என்பதை அவர்களிடம் கேளுங்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்