ஆர்எஸ் பாரதிக்கு வலுக்கும் எதிர்ப்பு : நாகா – தமிழர்களுக்குமான இணக்கத்தை கெடுப்பதா? கொந்தளித்த நாகாலாந்து ஆளுநர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 6:26 pm

ஆர்எஸ் பாரதிக்கு வலுக்கும் எதிர்ப்பு : நாகா – தமிழர்களுக்குமான இணக்கத்தை கெடுப்பதா? கொந்தளித்த நாகாலாந்து ஆளுநர்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழக ஆளுநர் இங்கு உட்கார்ந்து கொண்டு நம் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறார். நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? இவரை ஊரை விட்டே விரட்டி அடித்தனர். நாகாலாந்துகாரர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள். அவர்களே இவ்வளவு சொரணையுடன் ஆளுநரை விரட்டினார்கள் என்றால் உப்பு போட்டு சாப்பிடும் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாகாலாந்தில் இருந்து ஆளுநரை அனுப்பி வைத்த போது அதை மக்கள் பண்டிகை போல் கொண்டாடினார்கள். நாம் கொடுக்கும் மசோதாக்களிலும் அவர் கையெழுத்து போட மறுக்கிறார். இவ்வாறு ஆர் எஸ் பாரதி பேசியிருந்தார்.

இவருடைய பேச்சுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாகாலாந்து மக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியமிக்கவர்கள், அவர்களை ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என பகிரங்கமாக இழிவுப்படுத்தியது கேவலமானது, இதை ஏற்க முடியாது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ்.பாரதியை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்பியும் அமைச்சரும் ஆர்எஸ் பாரதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாகாலாந்து ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஒட்டுமொத்த நாகாலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல் சித்தரிப்பதா?

நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்துள்ளது. சாப்பிடும் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். உணவை வைத்து குணாதிசயத்தை முடிவு செய்ய முடியாது.

நாகா மக்களுக்கும் தமிழர்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது. ஆர்.என்.ரவி மீது நாகாலாந்து மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?