நம்மை நோக்கி ஒரு சுழல் வருது… தயாரா? கமல்ஹாசன் சொன்ன வார்த்தை : உற்சாகத்தில் மநீம நிர்வாகிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 7:17 pm
Kamal - updatenews360
Quick Share

நம்மை நோக்கி ஒரு சுழல் வருது… தயாரா? கமல்ஹாசன் சொன்ன வார்த்தை : உற்சாகத்தில் மநீம நிர்வாகிகள்!!

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதோடு கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்பட திரைபிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் தனது பிறந்தநாள் விழாவையொட்டி கமல்ஹாசன் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கினார்.
அதன்பிறகு சென்னை நீலாங்கரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இதில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நமக்கு நிறயை பணிகள் இருக்கின்றது. கடந்த வந்த பாதை ஒரு முறை அளந்து பார்க்க வேண்டும். இன்று நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய பாதையில் சரியாக நடக்க வேண்டும்.

நாளை சென்றடைய வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்தில் சென்றடைவோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அதில் மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அதற்கான முனைப்பாக செயல்பட்டு வருகிறோம். இந்த விழா எடுப்பதற்கு பல பேர் தூங்கவில்லை. பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் வசதிக்காக உட்காரவில்லை. அசதியாக உட்கார்ந்துள்ளனர். இரவு, பகலாக வேலை செய்துள்ளனர்.

அவர்கள் வீட்டு கல்யாணம் போல் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். இவர்கள் அனைவரும் தனியாக பெரிய பெரிய நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள். இவர்கள் சொன்னால் அவர்களுக்காக வேலை செய்ய 10 பேர் உள்ளனர்.

ஆனால் ஒரு ஆளின் சந்தோசத்துக்காக இப்போது இங்கு வந்துள்ளனர். இவர்களுக்கு நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லி முடித்துவிட கூடாது. இந்த அன்பு தொடர வேண்டும். இவர்களின் நன்றிக்காக அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்ய வைப்பேன்.

நாம் அரசியலில் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி இன்று இங்கு பேச வேண்டாம். ஆனால் ஒரு வேலை காத்து இருக்கிறது. இந்த விழாவை எப்படி இங்கு செய்துள்ளீர்களோ, அதேபோல் 10 மடங்கு முதல் 100 மடங்கான வேலை இருக்கிறது. அதை உங்களால் செய்ய முடியும். அதற்கான ஒத்திகை தான் இந்த விழா என வைத்து கொள்ளலாம். மிகச்சிறப்பான சூழல் நம்மை சுற்றி வலம்வர தொடங்கி விட்டது. அதனை நீங்களும் கவனித்து இருப்பீர்கள். அந்த சூழலை நாமும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் தேர்தல் அறிவிப்பு வந்த உடன் பலமடங்கு வேகமாக பணி செய்ய வேண்டி இருக்கும்.

அடுத்த பணிகளை நோக்கி உந்தி தள்ளும் வாய்ப்பாக இதனை எடுத்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பன்மடங்கு வேகமாக ஓட வேண்டி இருக்கும். அதற்கு தயாராக வேண்டும். நாளை நமதே வணக்கம்” என்றார்.

Views: - 218

0

0