ஊசி போடல.. குளுக்கோஸ் போடுறேன்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!

Author: Vignesh
21 August 2024, 3:20 pm

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் போடும் நிகழ்வு நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும் சம்பவம், செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிப்பது என்று அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம் . அதேபோன்று ஒரு சம்பவம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பெண் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர் கோதண்டம் என்பவர் குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்தார் . இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ஒருவர் அதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க அதை கவனித்த தூய்மை பணியாளர் கோதண்டம் நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் ஊசி போடலாமா ? என்று எதிர் கேள்வி எழுப்ப நான் ஊசி போடவில்லை குளுக்கோஸ் ஏற்றுகிறேன் என்று பதில் அளிக்கிறார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் முன்னிலையில் நடக்கிறது . இதை பார்க்கும் சக நோயாளிகள் அரசு மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறையால் தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறாரா அல்லது பணியில் இருக்கும் செவிலியர்கள் சோம்பேறித்தனத்தால் இது போன்ற சம்பவம் நடக்கிறதா ? அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை நோயாளிகளுக்கு இப்படி அலட்சியமாக சிகிச்சை அளிக்கிறார்களே என்று மனம் நொந்து கொண்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்