500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்
Author: Prasad28 April 2025, 12:03 pm
வெற்றி இயக்குனர்
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய எந்த திரைப்படமும் சுமார் என்று கூறவே முடியாது. அந்த அளவுக்கு ரசிகர்களை மகிழ்விக்க கூடிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார் சுந்தர் சி.

இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து வடிவேலுவுடன் இணைந்து நடித்த “கேங்கர்ஸ்” திரைப்படம் சென்ற வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் புரொமோஷன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் சி, பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கான வசூல் வேட்டை குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எல்லாமே பொய்
“500 கோடி வசூல் 1000 கோடி வசூல் என்று அறிவிப்பதெல்லாம் பொய். சும்மா பேப்பரில் போடுவது. பாவம் எத்தனை தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் அப்படி சொல்லவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் வாய்ப்பு தரமாட்டார்கள். அதனால்தான் அப்படி சொல்கிறார்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், ஒரு லிட்டர் பால் பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால்தான் ஊற்றமுடியும். அதில் எப்படி பத்து லிட்டர் ஊற்றிவிட்டேன் என சொல்ல முடியும். மார்க்கெட் அளவுக்கு என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. எல்லா படமும் 100 கோடி 200 கோடி என்று சொல்வதெல்லாம் பொய். ஏதோ ஒன்றிரண்டு திரைப்படங்கள் அப்படி ஓடுகிறது” என்று மிகவும் வெளிப்படையாக சுந்தர் சி அப்பேட்டியில் பேசியுள்ளார். சுந்தர் சி அவ்வாறு பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.