பிரின்ஸ் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் நீதிமன்றத்திற்கு கட்ட வேண்டுமா? ஐகோர்ட் போட்ட உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 6:10 pm
Sivakarthikeyan - Updatenews360
Quick Share

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடி வழங்க கோரி 2019ல் டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால், பிரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது, டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தரப்பில் 2019ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், பிரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்திரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பிரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் இந்த மனுவை டேக் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி சரவணன், பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Views: - 397

1

2