அடடா… பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டும் இந்த பாகற்காய் குழம்பை எப்படி செய்வதுன்னு தெரிஞ்சுக்க இத படிங்க!!!

Author: Hemalatha Ramkumar
19 April 2022, 3:34 pm

‌ ‌பாகற்காயின் மகத்துவம் பற்றி எல்லோர்க்கும் தெரியும். நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் கசப்பு நிறைந்த பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு இந்த பாகற்காய் பிடிக்காது. இருப்பினும் இந்த முறைப்படி பாவக்காயை, புளி‌ குழம்பு வைத்து கொடுத்துப் பாருங்கள். உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். சுவையான ஆரோக்கியமான இந்த பாகற்காய் குழம்பு எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 3
சின்ன வெங்காயம் – 20
பூண்டு பற்கள் – 10
தக்காளி – 2(பெரியது)
புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு
பச்சை மிளகாய் – 1
தேங்காய் துருவல் – 1/2 மூடி
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மிளகு – 5
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கருவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும். அதில் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் இவற்றை போட்டு பொறிய‌ விடவும்.

*பொன்னிறமாக பொரிந்ததும் அதில், பாகற்காயை நன்றாக கழுவி உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு. சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அவற்றைப் போட்டு வதக்கவும்.

*அடுப்பை குறைவான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வதக்கவும். பாகற்காய் பச்சை வாசம் நீங்கி பாகற்காய் நிறம் மாறும் வரை வதக்கவும்.

*பின்பு, அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், 6 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் நன்றாக வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

*புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*பின் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும், அதில் தேங்காய், மீதி உள்ள வெங்காயம், சிறிதளவு சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

*பிறகு , அந்த மசாலாவை கொதிக்கும் பாகற்காய் குழம்பில் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

*பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை தூவி இறக்கவும். இப்போது சுவையான பாகற்காய் புளி குழம்பு தயார்.

குறிப்பு:
15 நிமிடங்கள் பாகற்காயை வதக்குவதினால் நிச்சயம் கசப்புத்தன்மை இருக்காது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!