ஆவி பறக்க இட்லி சுட்டு இந்த குருமா வச்சு சாப்பிட்டு பாருங்க… இட்லி உள்ள போறதே தெரியாது!!!

Author: Hemalatha Ramkumar
12 October 2024, 10:57 am

என்னதான் வகை வகையா சட்னி செய்து கொடுத்தாலும் இட்லிக்கு குருமா வச்சு கொடுத்தா அன்னைக்கு இட்லி குண்டான் சீக்கிரமா காலி ஆயிடும். இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் வித்தியாசமான ஃபிளேவரில் அருமையான ஒரு இட்லி குருமா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் 11/2 டேபிள் ஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பு, 5 முதல் 6 பச்சை மிளகாய் சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் 4 பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் சோம்பு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும். 

இதையும் படிக்கலாமே: இந்த ரசப்பொடி வச்சு ரசம் செய்து பாருங்க… தெருவே மணக்கும்!!!

அடுத்து இதில் ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து இரண்டும் வறுப்பட்டவுடன் 1/2 கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் சேர்த்த பிறகு ஒரு நிமிடம் மட்டும் வதக்கினால் போதுமானது. இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். 

இப்போது கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு பெரிய சைஸ் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி ஒன்று சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 

தக்காளி சாஃப்டாக வதங்கியவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்து 2 வேக வைத்த உருளைக்கிழங்கை உங்களுக்கு பிடித்தமான அளவில் நறுக்கி சேர்த்து வதக்கவும். இப்போது நாம் அரைத்து வைத்த டேஸ்ட்டை சேர்த்து 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி கிளறி கொள்ளவும். 

இந்த குருமாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி சூடான இட்லிக்கு இந்த குருமாவை பரிமாறுங்கள்.

  • michael rayappan character was inspired from original character said by atlee ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ