சாம்பார், சட்னிக்கே டஃப் கொடுக்கும் கத்திரிக்காய் கடையல்!!!

Author: Hemalatha Ramkumar
23 May 2023, 6:57 pm

இட்லி, தோசை என்றாலே சாம்பார், சட்னி என்று தான் நாம் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் இன்னும் வித்தியாசமாக வடகறி போன்றவற்றை தயார் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் வடகறி செய்வதற்கு கூடுதல் நேரம் செலவாகும். இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. ஆனால் மிகவும் வித்தியாசமான சுவையில் அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும். இப்போது கத்திரிக்காய் கடையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு நறுக்கிய வெங்காயம், இரண்டு நறுக்கிய தக்காளி, இரண்டு உருளைக்கிழங்கு மற்றும் 3 பச்சை கத்திரிக்காய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இதனோடு ஐந்து பல் பூண்டு, 3 காய்ந்த மிளகாய், 3 பச்சை மிளகாய், ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து காய்கறி மூழ்கும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.

இது மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். அடுத்ததாக ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து மசித்து வைத்த கலவையில் ஊற்றினால் அருமையான கத்திரிக்காய் கடையல் தயார். சூடான இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றிற்கு இது அட்டகாசமான சைடிஷ். கண்டிப்பாக நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?