12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! ஒரே நாளில் குற்றவாளியைக் கைது செய்தது உத்தரபிரதேச போலீஸ்..!
27 August 2020, 1:12 pmஉத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையுடன் துப்பாக்கிச் சண்டையின் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஈகோடெக் 3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது. அதன் பின்னர் சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“குற்றம் நடந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் முகமூடி அணிந்திருந்ததால் வழக்கு சவாலானதாக இருந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. பாதிக்கப்பட்டவரும் சம்பவம் நடந்த போது தான் முதல்முறையாக குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்தார். இதையடுத்து சிறப்பு குழுக்களை அமைத்து போலீஸ் தீவிரமாக தேடிவந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்.” என்று போலீஸ் துணை ஆணையர் பிருந்தா சுக்லா கூறினார்.
“ஒரு போலீஸ் குழு குற்றம் சாட்டப்பட்டவரின் இடத்தை அடைந்தபோது, அவர் அந்த இடத்திலிருந்து ஓட முயன்றார். அவர் தப்பிப்பதற்கான முயற்சியில் போலீஸ் குழுவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆனால் இறுதியாக அவர் போலீசிடம் சிக்கினார்” என்று சுக்லா கூறினார்.
மைனர் சிறுமியை தான் சந்தித்ததாக அந்த அதிகாரி கூறினார். சிறுமியின் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி போதுமான மருத்துவ வசதி பெறுகிறார் என்றும் தெரிவித்தார்.
குற்றவாளியை கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் சுக்லா மேலும் தெரிவித்தார்.