மீண்டும் அரசியலில் குதிக்கிறாரா நடிகர் சிரஞ்சிவி : திடீரென வெளியிட்ட ஆடியோ… குழப்பத்தில் ரசிகர்கள்..!! (ஆடியோ உள்ளே)

Author: Babu Lakshmanan
20 September 2022, 8:17 pm
Quick Share

சினிமா படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் சிரஞ்சிவி, திடீரென அரசியலில் குதிக்கப்போவதாக வெளியிட்ட ஆடியோ, அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிரஞ்சீவி, கடந்த 2008ம் ஆண்டு ‛பிரஜா ராஜ்யம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய மறு ஆண்டே, அதாவது 2009ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 20% ஓட்டுக்களைப் பெற்றதுடன், 18 தொகுதிகளையும் கைப்பற்றி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு கிலி உண்டாக்கினார்.

குறிப்பாக, பலேகால், திருப்பதி என இரு தொகுதிகளில் போட்டியிட்ட சிரஞ்சீவி, சொந்த ஊரான பலேகால் தொகுதியில் தோல்வியடைந்தார். தேர்தலுக்கு பிறகு அடுத்த சில ஆண்டுகளில் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக்கொண்டதுடன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரானார்.

பின்னர், 2014ல் அரசியலிலிருந்து முழுவதுமாக விலகினார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக உள்ளார். இவரைத் தொடர்ந்து, அரசியலில் குதித்த சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணும் அரசியலில் குதித்தார்.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், அரசியல் என்னை விட்டு விலகவில்லை’ எனப் பேசியுள்ளார். இந்த ஆடியோவால் சிரஞ்சீவி ஏதேனும் கட்சியில் இணையப்போகிறாரா..? அல்லது பிற கட்சிகளுக்காக பிரசாரம் செய்யப் போகிறாரா என்ற ரசிகர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிரஞ்சீவி நடித்துள்ள அரசியல் கலந்த திரில்லர் கதையைக் கொண்ட ‛காட்பாதர்’ படத்திற்கான புரமோஷனுக்காக கூட சிரஞ்சீவி, இந்த அரசியல் வசனம் பேசியிருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Views: - 547

0

0