நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை : மும்பை போலீசாரால் பீகார் அரசு அதிரடி முடிவு..!
4 August 2020, 1:43 pmமும்பை : நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர், கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.
தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் ஒருபுறம் பரவி வந்தாலும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி வருகிறது. எனவே, சுஷாந்தின் மரண வழக்கு குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், அவரது காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை சென்ற போது, அவர்களுக்கு உள்ளூர் போலீசார் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.
பீகார் அரசின் இந்த பரிந்துரைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, “நீங்க சொன்னதை செய்து காட்டுகிறீர்கள்,”எனக் கூறியுள்ளார்.