இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து… ஒடிசா ரயில் விபத்தை மிஞ்சிய சம்பவம் ; எங்கே..? எப்போது..? தெரியுமா..?

Author: Babu Lakshmanan
3 June 2023, 2:37 pm
Quick Share

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதேபோல, நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில்நிலையம் அருகே பெங்களூரூவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரயிலின் சில பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது. இதில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ரயில் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அந்த சமயம், அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில், தடம்புரண்ட பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இதுவரையில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் நடந்த ரயில் விபத்து சம்பவங்கள் பற்றி தற்போது காணலாம்.

ஜனவரி 13, 2022 – மேற்கு வங்கத்தின் அலிபுர்தாரில் பிகானேர்-கவுத்தி எக்ஸ்பிரஸின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் பலி
ஆகஸ்ட் 23, 2017 – டெல்லி செல்லும் கைபியத் எக்ஸ்பிரஸின் 9 ரயில் பெட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் அவுரியா அருகே தடம் புரண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம், பயணிகள் யாரும் இறக்கவில்லை

ஆகஸ்ட் 19, 2017 – கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள கட்டவுலி அருகே விபத்துக்குள்ளானதில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் பலி ; 97 பேர் படுகாயம்
நவம்பர் 20, 2016 – கான்பூரின் புக்ராயன் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 150 பேர் பலியானார்கள், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மார்ச் 20, 2015 – அன்று டேராடூனில் இருந்து வாரணாசி நோக்கிப் பயணித்த ஜனதா எக்ஸ்பிரஸின் 2 பெட்டிகள் தடம் புரண்டதில் 30 பேர் பலி, சுமார் 150 பேர் காயமடைந்தனர்.


மே 26, 2014 – கோரக்பூரை நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதில் 25 பேர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஜூலை 30, 2012 – டெல்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மே 23, 2012 – ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸ் ஆந்திரப் பிரதேசம் அருகே சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் சுமார் 25 பயணிகள் பலி. இந்த விபத்தில் 43 பேர் காயம் அடைந்தனர்.

ஜூலை 7, 2011 – உத்தரபிரதேசத்தில் சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதிய விபத்தில் 69 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
ஜூலை 19, 2010 – மேற்கு வங்காளத்தில் உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 63 பேர் பலி, 165 பேர் காயமடைந்தனர்.

மே 28, 2010 – மும்பை செல்லும் ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரசில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
நவம்பர் 26, 1998 – ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் பஞ்சாபில் தடம் புரண்ட மூன்று ரயில் பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 2, 1999 – கெய்சலில் பிரம்மபுத்ரா மெயில் மீது ஆவாத்-அசாம் எக்ஸ்பிரஸ் மோதியதில் 268 பேர் பலி மற்றும் சுமார் 359 பேர் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் 20, 1995 – உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் அருகே காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதியதில் 358 பேர் பலியானார்கள்

ஜூன் 6, 1981 – சஹர்சா பீகார் அருகே பாக்மதி ஆற்றில் பயணிகள் ரயில் விழுந்ததில் 800 பேர் வரையில் உயிரிழந்தனர் ; இது இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும்.

Views: - 414

0

0