ஆந்திரா பால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிவு..! ஆபத்தான நிலையில் சிகிச்சை பெரும் தொழிலாளர்கள்..!
21 August 2020, 11:55 amஆந்திராவின் சித்தூரில் உள்ள பால் பண்ணைத் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிந்ததைத் தொடர்ந்து குறைந்தது 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புட்டலப்பட்டு மண்டலத்தில் உள்ள பந்தபள்ளியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவு சம்பவம் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நாராயண் பாரத் குப்தா கூறுகையில், மாலை 5 மணியளவில் எரிவாயு கசிவு தொடர்பான தகவல்கள் கிடைத்தன.
“மாலை 5 மணியளவில் புட்டலப்பட்டுக்கு அருகிலுள்ள ஹட்சன் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் பிரிவில் அம்மோனியா வாயு கசிந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அப்போது பணியிலிருந்த 14 தொழிலாளர்கள் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு சித்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்ட்டார்கள். அவர்களில், 3 பேர் அபாயக் கட்டத்தில் உள்ளதாகவும், அவர்கள் திருப்பதியில் உள்ள எஸ்.வி.எம்.எஸ் அல்லது ருயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.” என்று குப்தா கூறியுள்ளார்.
“மற்ற அனைவரும் நலமாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பெண்கள். இந்த சம்பவம் நிர்வாகத்தின் அலட்சியம் அல்லது தொழிலாளர்களின் அலட்சியத்தின் விளைவாக நடந்ததா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. தொழில்துறை பொது மேலாளர் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் வாயுக் கசிவிற்கான காரணம் குறித்து இன்று ஆய்வு செய்வார்கள்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அங்கு தயாராகும் பால்பொருட்களில் அம்மோனியா வாயு கலந்துள்ளது என்று சித்தூர் மாவட்ட புட்டலப்பட்டு துணை ஆய்வாளர் தெரிவித்தார்.