கொரோனாவால் இறந்தவரின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறிய காட்சி.!! அரசு மருத்துவமனையின் அவலம்.!!
11 August 2020, 4:09 pmஆந்திரா : கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஜருகுமல்லி மண்டலத்தில் உள்ள பிட்ருகுண்டாவை சேர்ந்த அறுபது வயது முதியவர் காந்தாராவ். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக ஓங்கோலில் உள்ள அரசு ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருடைய உடல் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் மருத்துவமனை வளாகத்தில் காணப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவருடைய உடலை சவக்கிடங்கிற்கு எடுத்து சென்று பத்திரபடுத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட காந்தாராவ் எப்போது இறந்தார், உயிருடன் இருக்கும் போதே கொரோனா வார்டில் இருந்து வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்தபோது அவருக்கு மரணம் ஏற்பட்டதா, மருத்துவமனைக்குள் மரணமடைந்து அவருடைய உடலை ஊழியர்கள் தூக்கிவந்து மருத்துவமனை வளாகத்தில் வீசிவிட்டு சென்றார்களா என்பது போன்ற பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த முதியவர் ஒருவரின் உடலுக்கு ஏற்பட்ட இந்த நிலை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனங்களையும் எழுப்பி வருகிறது.