உடலுறவு குறித்து சட்டசபையில் CM நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு… பெண்கள் குறித்த ஆபாசப் பேச்சை திமுக ஆதரிக்கிறதா..? பொங்கி எழும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 11:08 am
Quick Share

சட்டசபையில் பெண்கள் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆபாசமாக பேசியதை திமுக ஆதரிக்கிறதா…? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகாரில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அப்போது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவர் விளக்கமளித்தார். அப்போது, பெண்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அறிவு பெற்றிருந்தால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். கணவரின் செயல்பாடுகள் தான் அதிக குழந்தை பிறப்புக்கு காரணமாகிறது. எனினும், கல்வி அறிவின் மூலம் கணவரை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெண்களுக்கு தெரியும், தற்போது பிறப்பு விகிதம் சரிந்து வருவதற்கு இதுவே காரணம் ஆகும், என நகைச்சுவை பாணியில் பேசினார்.

மேலும், உடலுறவு குறித்து சைகை செய்தபடி அவர் சட்டசபையில் பேசியது பெண் எம்எல்ஏக்களை முகம் சுழிக்க வைத்தது. அவரது பேச்சுக்கு பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

அந்த வகையில் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள கண்டனப் பதிவில் கூறியிருப்பதாவது :- பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது. கேவலமாக பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. நிதிஷ் குமார் இனி அரசியலில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும், அதை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று சைகைகளோடு நக்கலாக, சிரித்து கொண்டே சட்டசபையில் பேசிய விவகாரத்தை கண்டிக்காத எந்த கட்சியும், அரசியலில் இருக்க தகுதியற்ற கட்சிகளாகவே கருதப்படும். I.N.D.I கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டிய விவகாரம் இது. திராவிட முன்னேற்ற கழகம் நிதிஷ் குமார் பேசியதை ஆதரிக்கிறதா?

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், பெண்களை இழிவாக பேசியுள்ள I.N.D.I கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இனியும் அந்த கூட்டணியில் இருக்குமா? வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் இந்த விவகாரத்தில் வாய் அடைத்து போயுள்ளது ஏன்? ஒட்டு மொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி, மானபங்கப்படுத்திய நபரை கண்டிக்கத்தவர்கள் மக்கள் தலைவர்களா?, என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 288

0

0