I.N.D.I. கூட்டணியில் இருந்து வெளியேறும் நிதிஷ்… இன்று பதவியை ராஜினாமா செய்ய திட்டம்… ஆட்சியில் பங்கெடுக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 12:59 pm
Quick Share

பீகாரில் பாஜகவின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

பீகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

அதன் பிறகு பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக ‘இண்டியா’ கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

அதேவேளையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடனான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜகவின் தயவு தேவைப்படுகிறது.

எனவே, மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளிளயாகி வரும் நிலையில், இன்று முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய இருப்பதாகவும், மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், முதலமைச்சராக நிதிஷ்குமார் நீடிப்பார் என்றும், 2 துணை முதலமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு வழங்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது I.N.D.I.A கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 233

0

0