குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.. 12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்… பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 5:45 pm
Quick Share

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், 12ம் தேதி நடக்கும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 64.33 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இங்கு வழக்கமாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். இந்த முறை, டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மியும் களமிறங்கியது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே உள்ளன. இந்த நிலையில், ஓட்டுகளை எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கையில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் 58,529 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் வெற்றி பெற்றார்.

தற்போது, குஜராத்தில் 154 தொகுதிகளில் பாஜகவும், 16 தொகுதிகளில் காங்கிரசும், 9 தொகுதிகளில் ஆம்ஆத்மியும் முன்னிலை பெற்றுள்ளன. இதன்மூலம் அரிதி பெரும்பான்மையுடன் பாஜக 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதனை தொண்டர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 12ம் தேதி குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 308

0

0