மாண்டஸ் புயல் எதிரொலி… 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 6 மாவட்டங்களில் இரவுநேர பேருந்து சேவை ரத்து..!!

Author: Babu Lakshmanan
8 December 2022, 6:12 pm
Rain School Leave -Updatenews360
Quick Share

சென்னை ; கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது.

இது நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேடை, கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 534

0

0