ஹேமந்த் சோரனை தொடர்ந்து ED வளையில் சிக்கும் கெஜ்ரிவால்…? சுற்றி வளைத்த அதிகாரிகள்…அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 11:41 am
Quick Share

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்காக ஆஜராகும்படி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிம்ஹவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்பி குப்தாவின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்மனுக்கு தொடர்ந்து ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது டெல்லி அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை நில ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நெருங்கி வருவது இண்டியா கூட்டணியினரிடையே மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Views: - 183

0

0