பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி… டக்கென உள்ளே நுழைந்த அதிமுக… தைலாபுரத்தில் நடந்த பரபர சந்திப்பு…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 12:04 pm
Quick Share

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஆளும் திமுக தங்களின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது. அதேவேளையில், அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜக சார்பில் ஜிகே வாசன் முன்நின்று நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடத்தை பாமக கேட்பதாகவும், பாஜக 7 இடங்களை மட்டுமே அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதனை பாமக ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக எம்பி சிவி சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி தொடர்பாக ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகயுள்ளது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளின் விபரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு பிற கட்சிகளை இழுக்க ஆர்வம் காட்டி வருவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Views: - 196

0

0