அலட்சியத்தால் பறிபோன பிஞ்சு உயிர்… திறந்திருந்த சாக்கடையில் விழுந்த 4 வயது சிறுவன் ; அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 8:00 pm
Quick Share

ஐதராபாத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், திறந்து கிடந்த சாக்கடை குழியில் 4 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மேற்கு வங்க கடலில் தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக, தென்னிந்திய பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான அளவில் மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்ட நிலையில், அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், திறந்து கிடந்த சாக்கடை குழியில் 4 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேச்சல் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கிய வண்ணம் உள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மிதுன் ரெட்டி என்ற சிறுவன், மழைநீர் நிரம்பியிருந்த திறந்து வைக்கப்பட்ட சாக்காடை குழாயில் எதிர்பாராத விதமாக காலை வைத்துள்ளார்.

இதனால், அதுக்குள் விழுந்த சிறுவனை மீட்பதற்குள், அவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். நிஷாமாபாத்தில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சிறுவன் சாக்கடை குழாயில் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சாக்கடை குழாயை முறையாக மூடாததே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Views: - 346

0

0