இண்டியா கூட்டணி பலவீனமாக உள்ளது.. கூட்டணிக்குள் இருந்து கொண்டே பூகம்பத்தை கிளப்பிய முன்னாள் முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 9:27 am
INDIA - Updatenews360
Quick Share

இண்டியா கூட்டணி பலவீனமாக உள்ளது.. கூட்டணிக்குள் இருந்து கெண்டே பூகம்பத்தை கிளப்பிய முன்னாள் முதலமைச்சர்!!

அடுத்த மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் களமிறங்க பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன.

தேசிய கட்சிகள் இந்த சட்டமன்ற தேர்தலில் மாநில அரசியல் நிலவரம் கண்டு மாநில நிர்வாகிகள் கூற்றுப்படியே செயல்படும். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒன்றுகூடிய இந்தியா (INDIA) கூட்டணியில் கூட சிறுது விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா கட்சி என 26 கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது சட்டமன்ற தேர்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியா கூட்டணி ஆலோசனைகள் டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட உள்ளன.

முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் முரண்பாடுகள் உருவானது.

மேலும், எதிர்வரும் உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக களம் காணும் என்று கூறப்பட்டன. இதனால் இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியக் கூட்டணியில் தற்போது எதோ சரியில்லை. அதிலும் குறிப்பாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் சில உள்முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸும் சட்டமன்ற தேர்தலுக்காக மோதிக் கொள்கின்றன. உத்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என காங்கிரஸ் – சமாஜ்வாடி என இரு கட்சிகளும் கூறி வருகின்றன. இது இந்திய கூட்டணிக்கு நல்லதல்ல. இந்த மாநிலத் தேர்தல்கள் எல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் மீண்டும் சந்தித்து ஒன்றாகச் செயல்பட முயற்சிப்போம் என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், காஷ்மீர் நிலவரம் குறித்து பேசினார். அதில் , காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இருந்தால் ஏன் பாஜக அரசு சட்டமன்ற தேர்தலை நடத்தவில்லை.?, நேற்று மட்டும் ஸ்ரீநகரில் பட்டப்பகலில் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
புல்வாமா பகுதியில் ஏதோ நடந்தது என்று கேள்விப்பட்டோம். நாங்கள் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என பாஜக கூறுகிறது. ஆனால், ஒவ்வொரு வாரமும் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறையும் ஒரு சம்பவம் அல்லது என்கவுன்டர் நடக்கிறது. இது சாதாரண சூழ்நிலையாக தெரியவில்லை .

மக்கள் சட்டமன்றத் தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பாராளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு கட்டாயம் ஆனால் அவர்கள் அந்த தேர்தலையாவது நடத்துவார்களா இல்லையா என்பதும் அவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Views: - 315

1

0