2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு..! மும்பை மாநகராட்சிக்கு எதிராக கங்கனா அதிரடி..!
19 September 2020, 11:46 amமும்பையில் உள்ள தனது பங்களாவை சட்டவிரோதமாக இடித்ததற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு மும்பை மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் கங்கனா ரனவத் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் பாலிவுட் மாபியா மற்றும் மும்பை போலீஸ் குறித்து கருத்து தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த சிவசேனா கங்கனா ரனவத்துக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்தது.
இதன் உச்சகட்டமாக செப்டம்பர் 9’ம் தேதி, மும்பை மாநகராட்சி ரனவத்திற்கு சொந்தமான பாலி ஹில் பங்களாவின் ஒரு பகுதியை இடித்தது. சரியான அனுமதியின்றி கணிசமான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ததாகக் கூறி இந்த நடவடிக்கையை எடுத்தது. பின்னர் நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து மும்பை மாநகராட்சி இடிப்பதை தற்காலிகமாக நிறுத்தியது.
இந்நிலையில் செப்டம்பர் 15’ம் தேதி, மும்பை மாநகராட்சியிடம் இருந்து ரூ 2 கோடி இழப்பீடு கோரி கங்கனா ரனவத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு பதிலளித்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் “ரிட் மனு மற்றும் அதில் கோரப்பட்ட நிவாரணங்கள் செயல்முறை துஷ்பிரயோகம் ஆகும். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.
மும்பை மாநகராட்சி அதிகாரிகள், “வாதி அசுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். உண்மைகளை அவர் மறைத்துள்ளார். எந்தவொரு நிவாரணத்திற்கும் அவர் பொறுப்பல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 22’ஆம் தேதி நடைபெற உள்ளது.