மும்பையை விட்டு வெளியேறக் கூடாது : ஆர்யன்கானுக்கான நிபந்தனைகளை வெளியிட்ட நீதிமன்றம்..!!!
Author: Babu Lakshmanan29 October 2021, 5:44 pm
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகளை மும்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நடத்திய சோதனையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா உள்ளிட்ட பிரபலங்களும் சிக்கினர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு அடுத்தடுத்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதேவேளையில், இருமுறை அவரது ஜாமீனும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சூழலில், 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம், ஆர்யன்கானுக்கு நிபந்தனை ஜாமீன் நேற்று வழங்கியது. இதன்மூலம் 21 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன்கான், ஜாமீனில் வெளியே வர இருக்கிறார். இது ஷாருக்கானின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆர்யன்கானுக்கு விதிக்கப்பட்ட ஜாமீனுக்கான நிபந்தனைகள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு :-
- அனுமதி இல்லாமல் மும்பையை விட்டு வெளியேறத் தடை
- விசாரணைக்கு அழைக்கும் போது போதைப்போருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்
- ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போதைப்போருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
- குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை ஆரம்பித்தவுடன் தாமதப்படுத்தக் கூடாது.
- வழக்கைப் பற்றி சமூக ஊடகங்களில் எதுவும் பதிவிடக்கூடாது,
- சிறப்பு நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது
- பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஆர்யன்கானுக்கான ஜாமீனை உடனே ரத்து செய்யக்கோர என்சிபிக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0