ஐஐடி மாணவர் தற்கொலை : போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்…
Author: kavin kumar17 January 2022, 8:22 pm
ஐஐடி மாணவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருகிறது ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம். இங்கு முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் 26 வயது மாணவர் ஒருவர், இன்று காலை 4 மணியளவில் விடுதியின் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியின் காவலர், தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது, தரையில் மாணவர் ஒருவர் உயிரிழந்தநிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசார், ஐஐடி நிர்வாகம், மாணவர்கள் உள்பட அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தரையில் கிடந்த அந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டநிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்பட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தர்ஷன் மால்வியா என்பதும், கடந்த ஜூலை மாதம் முதல் ஐஐடி விடுதியில் தங்கி முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தர்ஷன் மால்வியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், விடுதி அறையில் உள்ள பலகையில் கடிதம் எழுதி ஒன்றை ஒட்டி வைத்துள்ளார். அதில்,நீண்ட நாளாக தான் மன அழுத்தத்திலிருந்து இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகவில்லை என்றும் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐஐடியில், பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
0
0