புதுமண தம்பதி உள்பட 4 பேர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி : ஹோலி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 8:49 am
Quick Share

ஹோலி கொண்டாட்டத்தின் போது குளத்தில் குளித்த புதுமண தம்பதி உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், தனது கணவருடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார். பின்னர், அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் அந்தப் பெண் குளிக்க சென்றார். அவர்களோடு, அந்தப் பெண்ணின் சகோதரர் (13) மற்றும் சகோதரியும் (10) உடன் சென்றனர்.

அப்போது, இளம்பெண் குளத்தில் இறங்கி குளிக்கும் போது, ஆழமான இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அவர் நீரில் தத்தளித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்களும் உயிருக்கு போராடினர்.

மனைவி மற்றும் அவரின் சகோதரர், சகோதரி தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவரும் தண்ணீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். உயிரிழந்த தம்பதிக்கு 2 வாரங்கள் முன்புதான் திருமணம் நடந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 256

0

0