‘ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகர்ஜி‘ : ராணுவ மருத்துவமனை அறிக்கை!!
23 August 2020, 12:05 pmடெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை வழங்கி வரும் மருத்துவர்கள், அவரின் உடல்நிலை குறித்து நாள்தொறும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், உடல்நிலையில் எந்த மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆழ்ந்த கோமாவில் உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.