அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆபத்து..? உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்.. கோவிலை சுற்றி போலீஸார் குவிப்பு!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 4:53 pm
Quick Share

அயோத்தி ராமர் கோவில் அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் சுமார் ஆயிரம் கோடி செலவில் 110 ஏக்கரில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல்லை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ராமர் கோவிலுக்கான 50 சதவீத வேலைகள் முடிந்து விட்ட நிலையில், அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் மகரசங்கராந்தியின் போது கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கோவில் கருவறை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், ராமர் கோவில் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாகவும், அவர்கள் ராமர் கோவிலை தற்கொலை படை தாக்குதல் மூலம் தகர்க்க சதி செய்து உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அயோத்தி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

Views: - 475

0

0