மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்., மோதல்… பஞ்சாயத்து தேர்தலில் கலவரம் ; வாக்கு சாவடி சூறையாடல்… வாக்கு சீட்டுகள் தீ வைத்து எரிப்பு

Author: Babu Lakshmanan
8 July 2023, 11:17 am
Quick Share

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த மோதலால், வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஜுலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்கத்தில் நடக்கும் இந்தப் பஞ்சாயத்து தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று, வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெறும்.

தேர்தலுக்கு முன்பாக நேற்று நள்ளிரவில் மூர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஷாம்ஷெர்கஞ்ச் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் வீடு ஒன்று சூறையாடப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டி வரும் நிலையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இதேபோன்று, மால்டா மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், கூச்பெஹார் நகரில் உள்ள சிடாய் என்ற இடத்தில் அமைந்த பரவிதா முதன்மை பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிக்குள் மர்ம கும்பல் ஒன்று புகுந்து வாக்கு சாவடியை சூறையாடியது. வாக்கு சீட்டுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

Views: - 240

0

0