CM ஸ்டாலினும், அமைச்சர்களும் பயந்து போய் கிடக்குறாங்க… இரவில் தூங்குகிறார்களா..? என்பதே சந்தேகம் ; செல்லூர் ராஜு விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
8 July 2023, 9:08 am
Quick Share

மதுரை ; அதிமுகவினர் குண்டுகே பயப்படாதவர்கள் என்றும், யாரைக்கண்டும் பயப்படமாட்டோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :- அதிமுகவின் பல்வேறு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து உள்ளனர்.

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவத்தை தற்பொழுது பயின்று வருகின்றனர் மாணவராக சென்று டாக்டராக வெளியே வருகின்றனர்.

அதிமுகவில் இளைஞர்கள் அலை அலையாக சேர்ந்து வருகின்றனர். அதிமுகவின் மதுரை மாநாடு ஒரு வரலாறாக அமைய இருக்கிறது. கட்சி துவங்கிய காலத்தில் இது ஒரு நடிகரின் கட்சி 50 நாள் கூட நீடிக்காது என்று எல்லாம் பேசினார்கள். ஆனால், இன்று 50 ஆண்டுகளில் நிறைவு செய்து, தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக தற்போது பொன் விழா மாநாடு கொண்டாட இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் எழுச்சியோடும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அதிமுக மாநாடு அமைய இருக்கிறது. தொகுதிக்கு 25 ஆயிரம் பேர் வீதம் அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். மதுரையில் மற்றொரு சித்திரை திருவிழா காண இருக்கிறோம்.

தற்பொழுது வரை மதுரையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் தக்காளியை மறந்து போய் உள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்திலும் காய்கறி விலை ஏற்றம் இருக்கும். ஆனால், அதனை சமாளிக்க முன்கூட்டியே திட்டம் வகுப்போம். இந்த அரசு கமிஷன், கரப்சன் என்பதை நோக்கியே உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தூங்குவார்களா இல்லையா..? என தெரியவில்லை. எப்பொழுது அமலாக்கத்துறை வரும், ஐடி துறை வரும் என யோசித்துக் பயந்து போய் இருக்கிறார்கள். முதல்வரும், அவரது குடும்பமும் செந்தில் பாலாஜி வாய் திறந்து விடுவாரோ பயந்து போய் இருக்கிறது.

மதுரையின் மைந்தனாக இருக்கக்கூடிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார். அவரை கண்டுபிடிங்கள். மக்கள் போட்ட பிச்சையால்தான் திமுகவினர் அமைச்சர், எம்.எல்.ஏ என பதவியில் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் பிச்சை போட்டோம் என அமைச்சர்கள் வாய் கொழுப்பாக பேசி வருகின்றனர்.

திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு கொடுத்துவிட்டு, தற்பொழுது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என மாற்றி அறிவித்துள்ளனர். இதேபோல்தான் அனைத்து திட்டத்திலும் செயல்படுத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டு வைத்த நகைகள் அனைத்து மூழ்கிப் போய்விட்டன.

அதிமுக மட்டுமே ஜனநாயகத்தின்படி இயங்கும் ஒரே கட்சி. இங்குதான் ஏழை,பணக்காரன் சாதி, மத வேற்றுமை என கிடையாது. அனைவரும் உயர் பொறுப்புக்கு வர முடியும். குறிப்பாக தனபால் சபாநாயகராக அமர்த்தப்பட்டார்.
“திரெட்(threads)” என்ற சமூக வலைதளம் வந்திருப்பதாக கூறி இருக்கிறீர்கள். ஆலோசனை செய்து விட்டு அதில் இணைவது குறித்து பார்க்கலாம்.

காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் டி.ஐ.ஜி தற்கொலை செய்து கொண்டிருக்கிறது உண்மையிலேயே மன வேதனையை ஏற்படுத்துகிறது. தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.

விழுப்புரத்தில் அதிமுகவில் இருந்து விலகிய நிர்வாகி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக பயப்படுகிறது என பேசி இருந்தார் இந்த கேள்விக்கு:அதிமுகவை விட்டு சென்றவர்கள் கட்சி குறித்து எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எங்கள் கட்சி, எங்கள் தலைவர் குண்டுக்கே பயப்படாதவர். நாங்கள் எதைக் கண்டும் பயப்பட மாட்டோம், என்று சிரித்தபடியே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Views: - 192

0

0