ரெண்டே பேரு.. மொத்த டீமும் க்ளோஸ்… அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை திணறவிட்ட அப்ரார் ; ஷாக்கான ஸ்டோக்ஸ்..!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 6:07 pm
Quick Share

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கடந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரர்கள் க்ரவுளி – டக்கெட் இணை இந்த முறை ஏமாற்றத்தை கொடுத்தது. க்ரவுளி 19 ரன்களில் பாகிஸ்தானின் இளம் பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, நிதானமாக ஆடிய டக்கெட் – போப் ஜோடி மெதுவாக ரன்களை குவித்தது. அரைசதம் அடித்த டக்கெட் (63), போப் (60), ரூட் (8), ப்ரூக் (9) என அடுத்தடுத்து அப்ராரின் சுழலில் சிக்கினர். பின்னர், வந்த ஸ்டோக்ஸ் (30), வில் ஜேக்சையும் (31) அவர் விட்டு வைக்கவில்லை.

இதன் மூலம், அறிமுக போட்டியிலேயே பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான அப்ரார் அகமது 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த வாகப் ரியாஸ், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

பின்னர், வந்த ராபின்சன் (5), லீச் (0), ஆண்டர்சன் (7) ஆகியோரின் விக்கெட்டுக்களை ஜாகித் மகமுது கைப்பற்றினார். வுட் மட்டும் 36 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் அக் (0), அப்துல்லா சஃபிக் (14) ஆகியோரின் விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசம் (61), சவுத் ஷகில்(32) களத்தில் உள்ளனர்.

Views: - 397

0

0