ஒல்லி போப் சிறப்பான ஆட்டம்… சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்டர்கள் ; தட்டுத் தடுமாறி கரை சேர முயலும் இங்கிலாந்து…!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 6:54 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர். பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா (87) ரன்னுக்கும், அக்சர் படேல் 44 ரன்னுக்கும் அவுட்டாகினர். இதனால், இந்திய அணி 436 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்திருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால், விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. ஆனால், ஒல்லி போப் மட்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார்.

இறுதியில் 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒல்லி போப் 148 ரன்னுடனும், ரெஹான் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி சார்பில் பும்ரா, அஸ்வின் தலா 2 விக்கெட்டையும், அக்ஷர் படேல், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Views: - 747

0

0