உஷ்ஷ்ஷ்… ஆர்சிபியை சொந்த மண்ணில் வீழ்த்திய லக்னோ ; அலப்பறை செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்..!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 11:22 am
Quick Share

பெங்களூரூவுக்கு எதிரான கடினமான இலக்கை சேஸ் செய்து பெங்களூரூ ரசிகர்களுக்கு லக்னோ அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரூ – லக்னோ அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணியின் தொடக்க வீரர்கள் கோலி, டூபிளசிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். கோலி 61 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல், டூபிளசிஸ் ஜோடி வானவேடிக்கை காட்டியது.

மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் கேப்டன் டூபிளசிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் பெங்களூரூ அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு ஆரம்பம் சரியாக அமையா விட்டாலும், ஸ்டொயினிஸ் (65), பூரண் (62), பதோனி (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரூ அணி தனது சொந்த மண்ணில் 200 ரன்களுக்கு மேல் குவித்ததனால், வெற்றி உறுதி என மனக்கோட்டை கட்டியதுடன், லக்னோ அணியினரை கடுமையாக விமர்சித்து கோஷங்களை எழுப்பியிருந்தனர். ஆனால், போட்டியின் முடிவுகள் தலைகீழாக மாறியதால், பெங்களூரூ ரசிகர்களின் கொண்டாட்டம் சிதைந்து போய்விட்டது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு பெங்களூரூ ரசிகர்களை பார்த்து, லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர், வாய் மேல் விரல் வைத்து உஷ்ஷ்ஷ் என காட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 274

0

0