ரூ.3.50 லட்சத்தில் முன்கூட்டியே ஆர்டர் செய்த சவப்பெட்டி.. புக்கிங்கில் விமான டிக்கெட் ; மன தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்ட இளம்டாக்டர்..!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 10:03 pm
Quick Share

தெலுங்கானா: இறப்பு நிச்சயம் என்று தெரிந்த பின் மனைவி விதவை ஆகிவிடக்கூடாது என்று கருதி அவருக்கு விவாகரத்து கொடுத்து பொருளாதார ரீதியாக தேவையானவற்றை செய்து கொடுத்த உள்ளம் கொண்ட மருத்துவர், தனது மரணத்தை முன்கூட்டிய கணித்தது கேட்போரை உருகச் செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மன் நகரை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34ஆவது வயது ஹர்ஷவர்த்தன் எம்பிபிஎஸ் படித்து ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியில் இருந்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி அவருக்கு கம்மம் நகரில் உறவினர் பெண் ஹேமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதே மாதம் 29ஆம் தேதி அவர் மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். அப்போது விரைவில் விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் மனைவியை அழைத்து செல்கிறேன் என்று கூறி சென்று இருந்தார் ஹர்ஷவர்த்தன்.

இந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். அதனை தொடர்ந்து, செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. தொழில் ரீதியாக டாக்டர் ஆன அவருக்கு இரண்டு ஆண்டுகளில் மரணம் அடைந்து விடுவேன் என்று அப்போதே தெரிந்து விட்டது.

எனவே இது பற்றி தொலைபேசியில் தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஹர்ஷவர்தன், இப்போது இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டால் இங்கு சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று அவரை வற்புறுத்தினார். ஆனால் ஆஸ்திரேலியாவில் தரமான சிகிச்சை கிடைக்கிறது என்று பெற்றோரிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய மரணம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த ஹர்ஷவர்த்தனுக்கு, தான் இறந்து விட்டால் மனைவி விதவை ஆகிவிடுவாரே என்ற கவலை ஏற்பட்டது. இளம் மனைவி விதவை ஆகிவிட்டால் அவருடைய மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று அவர் கவலைப்பட்டார்.

இந்த நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட சூழ்நிலை பற்றி அவர் மனைவியுடன் பேசியதை தொடர்ந்து இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து மனைவி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக இடையூறுகளை சந்திக்காத வகையில் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருந்தார் ஹர்ஷவர்தன். இது தவிர தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர், நான் இறந்த பின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தினார்.

இது தவிர தன்னுடைய உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டி ஒன்றையும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தயார் செய்தார். இந்த நிலையில் இடை இடையே குடும்பத்தாருடன் வீடியோ கால் மூலம் பேசி பெற்றோர், உறவினர்கள் ஆகியோரை ஆறுதல்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹர்ஷவர்த்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த தன்னுடைய நண்பர்களிடம் நான் இன்னும் ஓர் இரண்டு மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று கூறினார். ஹர்ஷவர்த்தன் நினைத்தது போலவே அன்றே ஆஸ்திரேலியாவில் மரணம் அடைந்து விட்டார்.

ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் அவருடைய உடல் விமான மூலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சொந்த ஊரில் இம்மாதம் ஐந்தாம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

மரணத்தை தைரியமாக எதிர்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்த்தனின் கதையை கேட்கும் அனைவரும் தற்போது கண்ணீர் சிந்துகின்றனர்.

Views: - 332

0

0